
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த ஆத்துவழி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர், கணவரை பிரிந்து தனியாக ஊட்டி பகுதியில் உள்ள எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வாசுதேவநல்லூரில் உள்ள முத்துலட்சுமியின் அக்கா கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அக்காவின் இறப்புச் செய்தியை அறிந்த முத்துலட்சுமி, ஊட்டியில் இருந்து வாசுதேவநல்லூருக்கு வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, இறப்புக்குப் பிந்தைய 30-ம் நாள் சடங்குகள் முடியும் வரை அக்கா வீட்டிலேயே முத்துலட்சுமி தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருக்கும் அக்கா கணவர் நடராஜனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நடராஜன், முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்த முத்துலக்ஷ்மி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக நடராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.