
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குடிபோதையில் இருந்த நபர் சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட அந்த நபரை லாரி ஓட்டுநர் ஒருவர் தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதன் பின்னரும் அவர் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை மறித்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ரகளையில் ஈடுபட்டவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

