
புழல் ஏரியில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு தினமும் 30 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, புழல் ஜி.என்.டி. சாலையில் ஏற்பட்ட குழாய் உடைப்பால் சுமார் 15 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் உருவாகி, தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, சேதமடைந்த குழாயை அகற்றி புதிய குழாய் பொருத்தும் பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், திரு.வி.க. நகர், பட்டேல் நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டையார்பேட்டை மாதா கோவில் பகுதியில் 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், கோபமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் லாரி வராததால் பெண்கள், வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், சேதமடைந்த குழாயின் பகுதி வெட்டி அகற்றப்பட்டுள்ள நிலையில், புதிய குழாய் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால், பணிகள் நிறைவடைய மேலும் 2 நாட்கள் ஆகும் என குடிநீர் வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குடிநீர் விநியோகத்தை விரைந்து சீரமைப்பதுடன், அடிக்கடி உடைப்பு ஏற்படும் பழைய குழாய்களை முழுமையாக மாற்ற வேண்டும் என வடசென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

