
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அதுவரை அந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளிதர், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 28-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.


