
சென்னை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகே லாரி சென்றபோது, சர்வீஸ் சாலையில் இருந்து இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பிரதான சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் லாரியின் அருகே சென்ற நிலையில், லாரியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜமுனா என்ற பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஸ்ரீஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர், உயிரிழந்த ஜமுனாவின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்தபோது லாரி மற்றும் இருசக்கர வாகனம் எந்த நிலையில் பயணித்தன, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது என்ன நடந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து, விசாரணை முடிந்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


