
கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பாலவிடுதி செங்காட்டுப்பட்டி பகுதியில் மாணவ, மாணவிகளுடன் பள்ளி பேருந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக மாட்டுத் தீவனம் ஏற்றி சென்ற லாரி, எதிர்பாராத விதமாக பள்ளிப் பேருந்து மீது மோதியதில் பள்ளி வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்து கண்ணாடிகள் உடைந்து விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், மாணவிகள் 10 பேர், 6 மாணவர்கள் என 17 பேர் காயமடைந்தனர். இதில் சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த அனைவரும் மைலம்பட்டி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, அனைவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீசார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

