
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள கடத்தலை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து கனிமவள கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, இரு நாட்களாக இரவு நேரங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் அதிகளவில் இயக்கப்படுகின்றது.
இதையடுத்து, நேற்று இரவு சோதனைச் சாவடிகள் வழியாக அடுத்தடுத்து டாரஸ் லாரிகள் சென்றதால் சந்தேகத்தின் அடிப்படையில் சில சோதனைச் சாவடிகளில் போலீசார் அந்த லாரிகளை பிடித்து சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எஸ்.பி. ஸ்டாலின் இடமாற்றம் கனிமவள கடத்தல் கும்பலுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, கனிமவள கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


