
தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனுப்பப்படும் ரேஷன் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த குடோனில் சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் குடோனில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது.
அந்த குடோனில் பழைய ஆவணங்கள் மற்றும் காலி சாக்குகள் இருந்ததால் தீ மளமளவென பரவி, அருகில் இருந்த கணினி அறை மற்றும் மற்றொரு குடோனுக்கும் தீ பரவியது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தீ விபத்தில் சிக்காமல் தப்பின. இதனால் இந்திய உணவுக் கழக ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



