
தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 17 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மாநகரப் பகுதிக்குள் தற்போது 3 மதுபானக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் மதுபானக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், ஊழியர்களுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மாலை தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மதுபானம் வாங்குவதற்காக 1,000-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதையடுத்து, கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதிய நிலையில், முண்டியடித்து மதுபானம் வாங்க முயன்ற சிலர் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, வழக்கமாக பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடும் நிலையில், இன்று கூட்டம் அதிகமாக இருந்தபோதும் போலீசார் அங்கு இல்லாததாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து, ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், கடையில் மின்வெட்டும் ஏற்பட்டதால் நிலைமை மேலும் பதற்றமானதாக மாறியதால் தங்களது உயிருக்கும், கடையில் உள்ள பணத்திற்கும் பாதுகாப்பு இல்லை எனக் கருதிய ஊழியர்கள், இரவு 8 மணியளவில் கடையை மூடியுள்ளனர். மேலும்,
இந்த சம்பவம் குறித்து மாவட்ட மதுபான அலுவலகத்திற்கு புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


