
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயன்றபோது, பேருந்து நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அகற்றுமாறு அங்கிருந்த இளைஞரிடம் ஓட்டுநர் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த இளைஞர் ஓட்டுநரை தாக்கியதில் நிலைகுலைந்த ஓட்டுநர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை தட்டிக்கேட்டனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதை தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

