
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர். ஆனால், காலை நேரங்களில் பேருந்துகள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பேருந்துகள் தாமதமாக வருவதால் மாணவர்கள் பள்ளிக்குத் தாமதமாகச் செல்வதுடன், வேலைக்குச் செல்வோரும் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்து வராததால் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை நடுவழியில் மறித்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பேருந்து உரிய நேரத்தில் இயக்கப்படாதது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத்துத்துறை மேலாளரை தொடர்புகொள்ள முயன்றபோதும் அழைப்பு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் நலனை கருத்தில் கொண்டு, பேருந்துகளை உரிய நேரத்தில் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். கிராமப்புற வழித்தடங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.




