
சென்னை திருவான்மியூர் கெனால் ரோடு பகுதியைச் சேர்ந்த மங்கல்சந்த் அடையாறு இந்திரா நகர் தெருவில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.
அவரது கடையின் பூட்டை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சிப்பதாக அருகில் வசிப்பவர்கள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடைக்கு வந்த மங்கல்சந்த், கடைக்குள் புகுந்து திருட முயன்ற நபரை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
அப்போது அந்த சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த நபரைப் பிடித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் பாபு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கட்டிங் மிஷின், சுத்தியல், ஜாக்கி, டிரில்லிங் மிஷின், ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட கருவிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

