என்ரிகா மதுபான ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் பரபரப்பு பின்னணி என்ன என்பது குறித்து டீடெயில் ரிப்போர்ட்….
தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ரிகா மதுபான தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை ஒரே நாளில் என்ரிகா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதாக டாஸ்மாக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தடையை நீக்கியது யார் என்ற கேள்விக்கு புதிய தகவல் வெளியாகி உள்ளது
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது என்ரிகா நிறுவனம் மதுபான வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறதுஎன்ரிகா நிறுவன ஆண்டு வருமான கணக்கின்படி ஒரு பிராண்டில் மட்டுமே சுமார் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் 11 பிராண்டுகளுக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி காலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 11 பிராண்டுகளில் சுமார் 12,000 மது பாட்டில்கள் விதிமுறைகளுக்கு மீறலாக செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்டது தெரிய வந்ததால் உடனடியாக 12 ஆயிரம் பாட்டில்களில் உள்ள மதுவை விற்பனை செய்ய தடை விதித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த தகவல் டாஸ்மார்க் நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அன்று மாலையே இந்த பிராண்டுகளின் மது வகைகளை விற்பனைக்கு தடை உத்தரவை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் பிறப்பித்தனர்.ஆனால் முறையான அறிவிப்பாக இரண்டு நாட்கள் கழித்து கடந்த வியாழக்கிழமைதான் டாஸ்மாக் நிறுவனம் தடை விதித்த அறிக்கை வெளியானது
இந்த நிலையில் தான் திடீர் திருப்பமாக வெள்ளிக்கிழமை மதியமே டாஸ்மாக் நிறுவனத்தின் தடை உத்தரவு ஆணை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சத்தமே இல்லாமல் மற்றொரு விஷயம் யாருடைய கவனத்திற்கும் வராதபடி நடந்திருக்கிறது. அது என்னவென்றால் மத்திய உணவு பாதுகாப்பு நிறுவனமானது எந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினாலும் விதிமுறைகள் மீறப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை உடனடியாக பறிமுதல் செய்வதும். பின்னர் அவற்றில் சில சாம்பிள்களை எடுத்து ஆய்வக சோதனைக்கு உட்படுத்துவதுதான் வழக்கமான ஒன்று, ஆய்வுக்குப் பின்னர் என்ன மாதிரியான பொருட்கள் விதிமுறைகளுக்கு மீறி கலக்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை மத்திய உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்படும்
அதுவரை விதிமுறை மீறல் செய்த ஆலையின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவார்கள் அல்லது சம்பந்தப்பட்ட பேட்ச்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை முழுவதுமாக விற்பனை செய்ய தடை செய்து விடுவார்கள் இதுதான் அவர்களின் வழக்கமான ஒன்று.ஆனால் இந்த நடைமுறைகள் முடிவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகிவிடும் அதுவரை சம்பந்தப்பட்ட பேட்சுகளை விற்பனைக்கு அனுப்புவது என்பது சட்ட விரோதமாகவே மத்திய உணவு பாதுகாப்பு துறையால் பார்க்கப்படுகிறது
ஆனால் என்ரிகா விவகாரத்தில் செயற்கை நிறமூட்டிகள் என்று அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 12,000 மதுபான வகை பாட்டில்கள் உடனடியாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எந்த தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தினாலும் சுமார் 15 நாட்களுக்கு பின்னரே ஆய்வக முடிவுகள் அல்லது நிறுவனத்தின் பதில்கள் ஆகியவற்றை பொறுத்துதான் மீண்டும் விற்பனைக்கு அனுமதி கொடுப்பார்கள்.ஆனால் ஆய்வு நடத்திய இரண்டே நாட்களில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை என்ரிகா நிறுவனத்திற்கு விதித்த தடையை நீக்கி இருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது
மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு இந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் ??என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் பட்சத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் அனைவரும் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதும் தீர்க்கமாக கூறப்படுகிறது
ஒருவேளை இந்த விவகாரம் சிபிஐ, இ.டி உள்ளிட்ட அமைப்புகளால் விசாரிக்கப்பட்டால் இதில் முதலில் விசாரிக்கப்பட வேண்டிய லிஸ்டில் வருவது மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தான் … இதுவரை மத்திய உணவு பாதுகாப்பு துறை இது போன்ற இரண்டு நாட்களில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பொருட்களுக்கும் தடையை நீக்கியது இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.