
ஓசூர் பெங்களூரு கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகளால் கெலவரப்பள்ளி அணை, தென்பெண்ணை ஆறு மாசடைவதை விளக்கும் வகையில், ஓசூரில் இந்து ஜனசேனா சார்பில் ரூ.15 லட்சம் செலவில் விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், மாசடைந்த கெலவரப்பள்ளி அணை, ஆற்றில் பொங்கி வழியும் இரசாயன நுரைகள், மாசடைந்த நீரால் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, பெங்களூரிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவுகள் கெலவரப்பள்ளி அணைக்கு வந்து சேர்வதால், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் உருவாகி வருவதாகவும், இதனால் விவசாயம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தென்பெண்ணை ஆற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதை தொடர்ந்து, விநாயகர் வழிபாட்டுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு அரங்கைக் காண பொதுமக்களும் விவசாயிகளும் திரளாக வருகை தந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


