
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளருமான லட்சுமணன் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முகப்பை மறைக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றி இருந்தார். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் பொதுமக்களை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சியின் மேடையில் சட்டமன்ற உறுப்பினருக்கு மயில் இறகுகளால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் தேசியப் பறவையான மயிலின் இறகுகளை பயன்படுத்துவது வன உயிரினப் பாதுகாப்புச் சட்ட விதிகள் உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினரே இந்த குற்றச்செயலை ஈடுபட்டிருப்பது இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இது போன்று மயிலிறகைக் கொண்டு மாலை அணிவித்து ஊர்வலம் வந்ததாக கூறி கேரள மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினருக்கு மயிலிறகால் கொண்ட மாலை அணிவித்து இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறை முன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதை தெடர்ந்து, ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதாக கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தற்போது மயிலிறகு மாலை விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.




