
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாலை 3.15 மணி அளவில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது, 3 பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதை தொடர்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த 6 குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒரு வென்டிலேட்டரில் திடீரென ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக தீப்பற்றி பரவியதாக தெரிய வந்ததது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



