
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய சிந்து, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் அமைப்பதுடன், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், கடந்த கால ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவற்றை சரிசெய்ய நீண்ட காலம் ஆகும் எனவும் அவர் கூறினார் . வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதே தங்களது அரசின் நோக்கம் என தெரிவித்தார். முதியோரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவ சேவை, விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் சிந்து கூறினார். இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூறல் பெய்த போதிலும், தொண்டர்கள் கலைந்து செல்லாமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

