
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பரப்புரையாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் தெரிவித்த கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதல் வழங்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே அவரது கருத்தை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இதற்காக போராட்டம் நடத்துவது தவறு என்றும், தோழமைக் கட்சிகள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், ஆர்.எஸ். பாரதியின் பேட்டி காலாவதியாகிவிட்டதாக விமர்சித்தார். மேலும், நாமக்கல் மாளிகையில் முதலமைச்சருக்காக சிறப்பு அறை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் பேசிய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கியிருப்பதை வரவேற்று சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு என கூறினார். தொடர்ந்து, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக சறுக்கி, தள்ளாடிக் கொண்டிருப்பதாக விமர்சித்த அவர், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையே 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு என தெரிவித்தார்.