திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பணியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு அவ்வப்போது குற்றச் சம்பவங்கள் மற்றும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, நகர் வடக்கு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் புறக்காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பணியாளர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், ஒருவர் கீழே விழுந்து மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து, மற்ற பேருந்து பணியாளர்கள் சண்டையை விலக்கி, கீழே விழுந்தவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து நிலைய ரோந்து போலீஸார், மயங்கி கிடந்தவரை மீட்டு ஆட்டோ மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
