சட்டவிரோத ஸ்பாக்களால் திசைமாறும் இளைஞர்கள்

திண்டுக்கல் மாநகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் முறையான அனுமதியுடன் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் இயங்கி வரும் நிலையில், நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஸ்பாக்கள் எவ்வித அனுமதியுமின்றி தங்கு தடையின்றி செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரின் கண்டும் காணாத போக்கைப் பயன்படுத்தி, இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மசாஜ் சென்டர்களால் சமூக சீரழிவும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நடுத்தர, வசதி படைத்த வீட்டு இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் ஊழியர்களைக் குறிவைத்தே இந்த சட்டவிரோத ஸ்பாக்கள் நடத்தப்படுகின்றன. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ‘சாதாரண மசாஜ்’ என்ற விளம்பரத்துடன் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். உள்ளே நுழைந்தவுடன், கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு, ‘ஹாப்பி எண்டிங்’ என்ற பெயரில் பாலியல் ரீதியான சேவைகளுக்கு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.
இளம்பெண்களைக் கொண்டு இளைஞர்களை மோக வலையில் வீழ்த்தி, மிரட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும் ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதனால் ஏற்படும் சமூக தீமைகளும் கலாச்சாரக் கேடுகளும்இந்த சட்டவிரோத ஸ்பாக்களின் பெருக்கத்தால் திண்டுக்கல் நகரில் பல்வேறு சமூகப் பாதிப்புகள் மெல்ல மெல்ல தலைதுாக்கத் தொடங்கியுள்ளன. மசாஜ் சென்டர்களுக்குச் செல்ல பணம் தேவைப்படுவதால், சாதாரண இளைஞர்கள் கூட வழிப்பறி, திருட்டு, சைபர் குற்றங்களில் ஈடுபடும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அமைதியான திண்டுக்கல் நகரின் பண்பாட்டுச் சூழலை சீர்குலைப்பதுடன், அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து சட்டவிரோதத் தொழிலில் ஈடுபடுத்தும் மனிதக் கடத்தல் கும்பல்களுக்கும் இது புகலிடமாக மாறுகிறது.வாலிப பருவம், இளைஞர்களுக்கு முறையான கவுன்சிலிங் மூலம் போலி மசாஜ் சென்டர்களின் பின்னணியில் உள்ள மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைய சமுதாயம் சீரழிவதைத் தடுக்கவும், திண்டுக்கல் நகரின் அமைதியைக் காக்கவும் மாவட்ட எஸ்.பி., சட்டவிரோத ஸ்பாக்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும், வணிக வளாகங்களிலும் இந்த சட்டவிரோத ஸ்பாக்கள் பகிரங்கமாக இயங்குகின்றன. காவல்துறைக்குத் தெரிந்தே இவை நடக்கிறதா அல்லது அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சமூகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய மாவட்ட நிர்வாகமும், போலீசும் உடனடியாக களமிறங்க வேண்டும். திண்டுக்கல் மாநகரில் இயங்கும் அனைத்து ஸ்பாக்களிலும் அவ்வப்போது போலீஸ் திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி இயங்கும் 20-க்கும் மேற்பட்ட ஸ்பாக்களைக் கண்டறிந்து உடனடியாக அவற்றுக்குச் ‘சீல்’ வைக்க வேண்டும். பெண்களை வைத்து சட்டவிரோதத் தொழில் நடத்தும் உரிமையாளர்கள், புரோக்கர்கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூர் போலீசாரின் கூட்டு இருப்பதாகக் கூறப்படும் புகார்களை விசாரிக்க தனிப்படை அமைத்து ரகசியக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
