தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று (ஜூலை 11) மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்ட களத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, முதன்முதலாக வீரமுடன் போரிட்டு களம் கண்ட மாவீரன் அழகுமுத்துக்கோனின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று நடைபெற்ற விழாவை முன்னிட்டு, சங்கரன்கோவிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளாக வருகை தந்து மாலை அணிவித்து நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தினர்.
திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் தங்களது தொண்டர்களுடன் வருகை தந்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். அப்போது விழாவில் பங்கேற்றவர்கள், “வீரவணக்கம்… வீரவணக்கம்… மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு வீரவணக்கம்!” என விண்ணதிரும் வகையில் எழுப்பிய முழக்கங்கள் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், தேசப்பற்றுமிக்க எழுச்சியையும் ஏற்படுத்தின.
இந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாவீரனின் தியாகத்தைப் போற்றிச் சிறப்பித்தனர்.


