திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதையில் இளைஞர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் போதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை அந்த இளைஞர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
மேலும், அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட அவர், அங்கிருந்த கல்லை எடுத்து பொதுமக்கள் மீது வீச முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை அங்கிருந்து விரட்டினர். அப்போது சிலர் அந்த இளைஞரை அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.
அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது, சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் போதையில் சுற்றித்திரிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
