
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மகாசக்திபுரத்தில் வீர வன்னியர் படையாட்சி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாபெரும் படகு போட்டியை நடத்தினர். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. போட்டிக்காக கரையிலிருந்து 10 கடல் மைல்கள் தொலைவில் போட்டி எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு படகிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற படகுகள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஒன்றை ஒன்று முந்திச் சென்றது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்போட்டியை காண சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு தொண்டி மற்றும் சுற்றுவட்டார மீனவ மக்களிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.


