
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் எம்.தங்கராஜ், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 48 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கராஜும் இடம்பெற்றுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வரும் தங்கராஜ், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பள்ளி வளர்ச்சியில் சிறப்பாக பங்களித்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ள தங்கராஜ், தற்போது தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தென்காசி மாவட்டம் மற்றும் சங்கரன்கோவில் பகுதி மக்களிடையே பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில், ஆசிரியர் எம்.தங்கராஜுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.



