
தென்காசி நகராட்சியில் பணியாற்றி வந்த TPO, மருத்துவ விடுப்பில் சென்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. இதனால் செங்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இன்சார்ஜ் TPO-வாக நியமிக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் தென்காசி நகராட்சிக்கு வந்து பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இன்சார்ஜ் TPO-வும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால், தென்காசி நகராட்சியின் Town Planning பிரிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டிட அனுமதி, கட்டிட வரைபட பரிசீலனை, மனைப்பிரிவு மற்றும் நிலப் பயன்பாடு மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள், நகரமைப்பு சார்ந்த சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கட்டிட அனுமதி மற்றும் நகரமைப்பு அனுமதிகளுக்காக விண்ணப்பித்துள்ள பொதுமக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிட உரிமையாளர்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நகராட்சியின் வருவாய் மற்றும் வளர்ச்சிப் பணிகளிலும் இதன் தாக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், தென்காசி நகராட்சிக்கு நிரந்தர TPO-வை உடனடியாக நியமிக்க வேண்டும் அல்லது முழுநேர பொறுப்பு அதிகாரியை நியமித்து, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நகரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


