
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அனவன் குடியிருப்பு கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கரடி நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனால் கரடியை பாதுகாப்பாகப் பிடித்து, பொதுமக்களுக்கும் வனவிலங்கிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறையினரால் கூண்டு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில், ஒரு கரடி கூண்டில் வெற்றிகரமாக சிக்கியது. மேலும், இது குறித்து அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக் காப்பாளர், வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் ஆகியோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் வழிகாட்டுதலுடன் கரடியை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், கரடி முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட கொடமாடி பீட் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
பின்னர், கரடியை மீட்டு, பொதுமக்களுக்கும் வனவிலங்கிற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்பட்டால், பொதுமக்கள் அவற்றை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ அல்லது கூட்டமாகச் சென்று பார்வையிடவோ கூடாது. மேலும், வனவிலங்குகள் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அருகிலுள்ள வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


