
பெருங்குடி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால், 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதிக வெப்பம் அக்னி நட்சத்திரம் முடிந்து, பல மாதங்கள் கடந்தும் சென்னை மாநகரில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, பெரும்பாலான வீடுகளில் ‘ஏசி, பிரிஜ்’ மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மின்சாரத்தின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் போது, மின்மாற்றிகளின் கொள்ளளவை தாண்டி இயங்குவதால் அதிக வெப்பம் உருவாகி தீப்பிடிக்கிறது. அந்த வகையில், பெருங்குடி துணை மின் நிலையத்தில் உள்ள 100 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் மாற்றி, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டது. இந்த தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து, தீப்பிடித்த மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில், 10 மணி நேரத்திற்கும் மேல் மின் வினியோகம் தடைபட்டது.
