
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில், இருவரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை 27-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹலாலா எஸ்டேட் பகுதியில் புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏற்கனவே ஒரு சிறுத்தை சிக்கியிருந்த நிலையில், நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக மற்றொரு சிறுத்தை சிக்கியது.
இந்த தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். இதை தொடர்ந்து, புலியைப் பிடிக்கும் நோக்கில் கூண்டுகளை இலை, தழைகளால் மறைத்து, அதில் இறைச்சி வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து, நாயுடு எஸ்டேட் மற்றும் தோரப்பள்ளி பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட வன அலுவலர் தலைமையில், ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, புலியைப் பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், சீனிவாசன் மற்றும் கிரி என்ற இரண்டு கும்கி யானைகளும் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன.

