
திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் சௌந்தரராஜா மில் அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த சரவணக்குமார் வயது 35 மற்றும் முத்துமாரிசாமி வயது 27 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொறுப்பு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் விசாரணை நடத்தி கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வரை இதுபோன்ற தீவிர சோதனைகள் தொடரும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
