
கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மணிகண்டன் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர்குள்ளனுரில் வேறொரு பகுதியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்து சம்பந்தமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்டில் பணியாற்றி வரும் மணிகண்டன் விடுமுறைக்காக குள்ளனூரில் உள்ள வீட்டிற்கு வந்து வழக்கம்போல் சொத்துப் பிரச்சனை தொடர்பாகத் தம்பியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து, தம்பி இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தம்பியின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளார். பெற்றோரின் மருத்துவ சிகிக்சைக்காக வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய செந்தில்குமார் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்ப்பதற்குள், இருசக்கர வாகனத்தின் அனைத்து பாகங்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அப்பொழுது அங்கு மறைந்திருந்த மணிகண்டன், பெற்றோரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகப் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
