
கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களை சேகரிக்க சொன்ன வட்டாட்சியர் – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்
18.08.2026 அன்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அரசியல் காட்சிகளில் உள்ள நபர்களின் அனைத்து வித விபரங்களையும் மாலைக்குள் சேகரித்து கிராம உதவியாளர்கள் அந்தஅந்த பகுதி வருவாய் ஆய்வாளர்கள் மூலம் நேரடியாக வந்து வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வழங்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இதனால் அதிரிச்சியடைந்த கட்சியினர் உடனடியாக கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்தனர் .

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சிதானந்தம் அவரது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது
கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் சேகரிக்க சொல்லி பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா?
மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ, குற்றவாளிகள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு சேகரித்து வைத்துள்ளாரா? பொதுமக்கள் வட்டாட்சியரை சந்திப்பதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் பகல் 12 to 1 மணி வரை மட்டுமே எனவும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் அய்யாசாமி என்ற வட்டாட்சியரை வருவாய்த்துறை திரும்பப் பெறவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிகழ்வு கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி போட்ட உத்தரவை ( சுற்றறிக்கையை ) உடனடியாக திரும்ப பெறப்படுவதாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார் .

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்ட குஜிலியம்பாறை தாசில்தார் அய்யாசாமி சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
