
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தின் சின்னப்புல் பகுதியில் பெண் கரடி ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது.
முண்டந்துறை வனச்சரகப் பணியாளர்கள் திங்கள்கிழமை முகாம் பணிகளை முடித்துவிட்டு திரும்பியபோது, தைலாத்து ஓடை பீட் ஆற்றுப் பகுதியில் கரடி இறந்து கிடப்பதை கண்டு உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த், வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் மற்றும் முண்டந்துறை வனச்சரகர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கரடியின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்த கரடிக்கு சுமார் 14 வயது இருக்கும் என்றும், அது உயிரிழந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது முதிர்வின் காரணமாக இயற்கையாக உயிரிழந்திருக்கக்கூடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

