
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் முற்றிலும் உருக்குலைந்ததால், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காரை வெட்டி உடல்களை மீட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உயிரிழந்தவர்களில் விஸ்வா, சூர்யா, சந்தோஷ், பிரசன்னா யுவசஞ்சித் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர், மீட்கப்பட்ட 8 பேரின் உடல்களும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து கைப்பமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் முழுமையான அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்குப் பின்னரே உறுதியான தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.



