
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சார்பு ஆய்வாளர் பாண்டிச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவிகளிடம் பெண்களின் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மாணவிகளிடம் பேசிய சார்பு ஆய்வாளர் பாண்டிச்செல்வி, “பெண்கள் நாட்டின் கண்கள்.
பெண்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. எந்தச் சூழலிலும் அச்சமின்றி மனத் தைரியத்துடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மேலும், ஆண்களுடன் பழகும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டிய அவசியம், நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் (Bad Touch) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், யாரேனும் தவறான முறையில் நடந்து கொண்டால் உடனடியாக காவல்துறையின் உதவி எண்களை தொடர்புகொள்ள வேண்டும் என்றும், “உங்களுக்கு துணையாக காவல்துறை எப்போதும் இருக்கும்” என்று உறுதியளித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனுசுயாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், மாணவிகள் தைரியமாகவும் விழிப்புணர்வுடனும் செயல்பட உறுதியேற்றனர்.
மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினருக்கு பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
