
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தைச் சேர்ந்த கோகிலா என்ற 7 மாத கர்ப்பிணி பெண் திடீரென மாயமானார். இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றை சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கிணற்றில் சாக்குப் பையில் கட்டப்பட்ட நிலையில் கோகிலாவின் சடலம் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கோகிலாவின் கர்ப்பத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் அம்மாசி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கோகிலாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை கிணற்றில் வீசியதாகவும் அம்மாசி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
