
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் (STR) தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெஜலட்டி கிராமத்திற்கு அருகே, சுமார் 40 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு வயதுடைய புலியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் எலும்புகள், மண்டையோடு மற்றும் தோல் ஆகியவை கிடைத்துள்ளதாகவும் சில உடல் பாகங்கள் சுற்றிலும் சிதறிக் கிடந்ததாகவும் தொடர்ந்து தேடுதல் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஓடைக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் சடலம் கிடந்ததால், அதன் துர்நாற்றம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சென்றடையாமல், சடலம் கண்டறியப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், முதற்கட்ட பிரேதப் பரிசோதனையில் வேட்டையாடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பரப்பில் குறைந்தது நான்கு புலிகள் உயிரிழந்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், இந்த தொடர் புலி இறப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
