
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பஜாரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு இளைஞர்கள் காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிற நிலையில், தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி இரண்டு போலீசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். அந்த இளைஞர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, எஸ்.ஐ. பொன் முனியசாமியை இளைஞர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பினர். இதில் தலையில் காயமடைந்த எஸ்.ஐ. மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் போலீசார் மீட்டு ஆட்டோ மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூரைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் எமர்சன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.


