
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனம் மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் நேற்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் 5 ஆயிரம் கன அடியாகவும், நள்ளிரவில் 7 ஆயிரம் கன அடியாகவும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் பகுதிக்கு வந்தடைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, புகழூர் தடுப்பணையை கடந்து சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவில் மாயனூர் கதவணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், தேவைக்கேற்ப காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் திறந்து விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

