திண்டுக்கல் மாவட்டம், கீழ்மலைப் பகுதிகள் இயற்கையின் கொடையான கொடைக்கானல் மலைத்தொடர், தென் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றாகும்.
இதன் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் சரிவதைத் தடுக்கவும், மண்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் கனரக போர்வெல் (ஆழ்துளைக் கிணறு) எந்திரங்கள், ஜேசிபி (JCB) மற்றும் பாறைகளை உடைக்கும் எந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு உயர் நீதிமன்றமும் தமிழக அரசும் கடும் தடைகளை விதித்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான ஆடலூர், பன்றிமலை, கிழக்கு செட்டியபட்டி, கள்ளக்கிணறு, பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் இந்தத் தடைகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்முன்னேயே காற்றில் பறக்கவிடப்பட்டு வருகின்றன.
இரவும் பகலும் தொடரும் சட்டவிரோதப் பணிகள்
சமீபகால ஆட்சி மாற்றத்திற்கு பிறகு குறைந்திருந்த போர்வெல் பயன்பாடு கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் பத்துக்கும் மேற்பட்ட போர்வெல் இயந்திரங்களை கொண்டு இரவு பகலாக பல்வேறு இடங்களில் போர்வெல் சட்டவிரோதமாக அமைத்து வருகின்றனர். சில இடங்களில் ஆயிரம் அடிக்கும் மேல் வரை ஆழ்துளை கிணறுகள் தோண்டி வருவதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிக்கப்படும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற இயந்திரங்கள் வன சோதனைசாவடிகளை கடந்து தான் செல்லவேண்டிய நிலையில் தடை செய்யப்பட்ட இயந்திர வாகனங்களை வனத்துறையின் முழு ஒத்துழைப்புடன் தான் இந்த பகுதிகளுக்கு வருவதாகவும் இது போன்ற செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய கனிமவளத்துறை , மாவட்ட மலைகள் பாதுகாப்பு குழுவினர் , சுரங்கதுறை , வருவாய்த்துறை , வனத்துறை , காவல்துறை என எந்த துறையின் கண்ணிலும் படாமல் இத்தனை வண்டிகளும் எப்படி மேலே வந்து நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன என்றும் இது குறித்த புகார்கள் அனைத்தும் பெறப்பட்ட துறைகளின் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் தர கூறி விண்ணப்பித்தாலும் பெரும்பாலும் மழுப்பலான பதில்கள் மட்டுமே கிடைப்பதாகவும் சில துறைகள் பதிலே அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் துர்காதேவி IAS , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS , மண்டல வன பாதுகாவலர் முகமது சபாப் IFS ஆகியோர் நேரடியாக தலையிட்டு இந்த சட்டவிரோத ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திர பயன்பாடுகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது
வீடியோக்கள் : கள்ளக்கிணறு பகுதி
