


திண்டுக்கல் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரியநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அதிக மக்கள் மருத்துவ சேவைகளுக்காக வந்து செல்லும் நகரின் ரயில் நிலையம் மற்றும் அரசு தொழிற்பேட்டைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஆகும்
இந்த சுகாதார நிலையத்தின் நுழைவாயிலை ஒட்டி கோமதிபுரம் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது . மேலும் இப்பகுதியி சேரும் குப்பைகளையும் அவ்வப்போது இந்த கால்வாய் ஓரங்களில் கொட்டி தீ வைக்கின்றனர்.
இதில் நெகிழி கழிவுகள் உட்பட அனைத்து வித கழிவுகளும் கொட்டி தீ வைப்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் சாலையில் செல்வோர் மட்டுமின்றி அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன் சாக்கடை கால்வாயையும் சுத்தம் செய்து நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.