
தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கல்லூரியில் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த ஆணழகன் கலந்து கொண்டனர். இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் இருந்து விலகி, உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 18 முதல் 50 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று மொத்தம் 15 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சுமார் 200 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பு மற்றும் உடற்பயிற்சி திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.