
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரியாவின் சகோதரி முத்துலட்சுமியுடன் தட்டார்மடம் காவலர் முத்துக்குமார் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் முத்துலட்சுமியிடம் இருந்த நகைகளை முத்துக்குமார் வாங்கி அடமானம் வைத்ததாகவும், அவற்றை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் காவலர் முத்துக்குமாரிடம் சென்று பிரியா, நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த காவலர் முத்துக்குமார், அரிவாளால் பிரியாவை சரமாரியாக வெட்டியதால் பலத்த காயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
