
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் பணிகள் தினசரி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று இந்த மையத்தில் தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த பழைய துணிகள் மற்றும் சேகரித்து வைக்கப்பட்டிருந்த துணிப் பண்டல்களில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்தது. காய்ந்த துணிகள் என்பதால் தீ மளமளவென பரவி, அப்பகுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அதிவேகமாகச் செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அனைவரின் கூட்டு முயற்சியால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகளவில் உள்ளதால், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. எனினும், தீயணைப்பு வீரர்களின் சாமர்த்தியமான மற்றும் விரைவான நடவடிக்கையால் தீ குடியிருப்பு பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.