செங்கல்பட்டு அருகே அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 12 பேர் பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பி ஓட்டம்
சாலையில் சென்ற பொது மக்களை தாக்கி 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் கைபேசிகளை பறித்து சென்றதால் பரபரப்பு…..
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் 78-க்கும் மேற்பட்ட சிறார்கள் இந்த அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தொலைக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென இரு தரப்பினர் இடையே தகராறில் வாயில் காவலரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சாவியை பறித்துக் கொண்டு 12 சிறார்கள் தப்பிச் சென்றனர்.
தப்பிச் செல்லும் போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கியதாகவும், அவர்களிடமிருந்து செல்போன்கள், பணம் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், பாதுகாப்பு இல்லத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற சிறார்களை விரைந்து பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற சிறார்களை விரைவில் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


