சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில் கேரள அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆசையோடு காத்திருக்கின்றனர். ஆகவே இந்து சமய அறநிலையத் துறை மாற்றுத்திறனாளிகளை இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தினை வகுத்து, வரக்கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில இடங்களிலிருந்து மட்டுமே சபரிமலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகவே அதற்குப் பதிலாக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலிருந்தும் சபரிமலை வரை செல்ல பேருந்துகளை இயக்க வேண்டும். இதனால் பக்தர்களின் நேர விரயம் குறையும் என்றும் கூறினார்.
சபரிமலை சீசன் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. விரதம் இருந்து மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இந்து சமய அறநிலையத் துறை கோவில்களில் மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு பிரத்யேக வரிசை அமைத்து சாமியை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகையுடன் ஆன்மீக சுற்றுலா மூலம் சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகவே ஆன்மீக சுற்றுலா அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பேட்டி:
முருகன்,
தேசியத் தலைவர்,
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்.
