
சென்னை எண்ணூர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன் உட்பட 3 பேரை சாத்தாங்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூம்புகார் நகர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பூம்புகார் நகர் பெரியார் திடல் அருகே ரயில்வே தண்டவாளத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த 3 பேரிடமும் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், அவர்களிடம் இருந்து சுமார் 50 ஆயிரம்ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மற்றும் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை மேற்குவங்கத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்த நிலையில், இதில் ஈடுபட்ட சரத்குமார், சிவபாலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 17 வயது சிறுவன் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
