
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தரிசனத்திற்குப் பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அவர்களுக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜிஎஸ்எல்வி-17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-05 விண்ணில் ஏவப்பட உள்ளது என்று தெரிவித்தார்.மேலும், இஸ்ரோ தனியார்மயமாக்கப்படவில்லை என்றும், அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் தேவைப்படுவதால் அவற்றை தயாரிப்பதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். பிஎஸ்எல்வி ராக்கெட் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பிஎஸ்எல்வி இதுவரை 60-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான ஏவுதல்களை மேற்கொண்டுள்ளது. அதில் நான்கு ஏவுதல்கள் தோல்வியடைந்துள்ளன என்றும், தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


