திண்டுக்கல் நகர் பகுதியில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் RMTC காலனி அருகில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் திண்டுக்கல் புறவழி சுற்று சாலையில் நேற்று இரவு MS என முன்புற கண்ணாடியில் பெயர் உள்ள சொகுசு வேன்கள் மூன்று நிறுத்தப்பட்டு சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை முழுவதும் பெரிய பெரிய வெடிகளை வெடித்தும் அதிக சத்தத்துடன் பாடல்களை பாடவிட்டதுடன் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கண்கூசும் விளக்குகளை வாகனங்களில் எரியவிட்டபடி திண்டுக்கல் நோக்கி கிளம்பி சென்றனர்.
போக்குவரத்து வாகன விதிகளில் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட வாகனங்கள் மின் விளக்குகள் அதிக ஒளி எழுப்பும் கருவிகள் பயன்பாடு ஆகியவற்றுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலையில் இப்படி ஆட்டம் போட்ட இளைஞர்கள் யார் யார் என்ற விபரங்கள் தெரியவில்லை.
மேலும் சாலைகளில் வாகன போக்குவரத்திற்கும் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேப்பர் வெடி என்னும் அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை நடு இரவில் வெடித்து ஆட்டம் போட்ட இளைஞர்கள் மற்றும் போக்குவரத்து வாகன சட்ட விதிகளை மீறி சொகுசு வேன்களை இயக்கிய வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.