
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. இந்தப் படகுகள் வழக்கமாக சனிக்கிழமை கரை திரும்பும் நிலையில், இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியுள்ளன. இந்நிலையில், கரை திரும்பிய படகுகளில் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து, துறைமுகத்தில் சீலா மீன் கிலோ ரூ.1,200 வரையிலும், நண்டு ரூ.800 வரையிலும் விற்பனையானது. ஊளி, பாறை, விளை உள்ளிட்ட மீன் வகைகள் கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கேரை மீன்களின் வரத்து அதிகரித்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




