
இந்தியாவிலேயே முதல்முறையாக, மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக, ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி நகரம் உருவாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து 15 கிலோமீட்டர் தென்மேற்கில், கிருஷ்ணா ஆற்றின் வலக்கரையில் குண்டூர் மாவட்டத்தில் அமராவதி அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாதவாகனப் பேரரசின் தலைநகராக விளங்கிய, வரலாற்றுச் சிறப்புமிக்க அமராவதி தளத்தின் பெயரிலிருந்து இந்த நகருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 217 சதுரமைல் சுற்றளவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய தலைநகரத்தை, கம்பங்களே இல்லாத இந்தியாவின் முதல்நகரமாக மாற்றி கட்டமைக்க ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். மின்சாரம், தொலைதொடர்பு இணைப்புகள் அனைத்தும் பூமிக்கடியில் அமைக்கப்பட்டு, மின்கம்பங்களே இல்லாத நகரமாக இது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

